குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் பங்காளிகள்; ராஜதந்திரத்தில் பகடைகள் அல்ல!

Loading

இந்திய அரசியலுக்கு மட்டுமே உரித்தான விசித்திரமான முரண்பாடாக, உள்நாட்டில் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் ஓர் அரசாங்கம், அண்மையில் பஹல்காமில் நிகழ்ந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை ‘வெளிக்கொணர்வதற்காக’ முஸ்லிம் முகங்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ள 48 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பரந்த, பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவை தற்போது ஒருங்கிணைத்துவருகிறது.

முஸ்லிம்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பது பிரச்சினையல்ல. மாறாக, இதன் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனமான அடையாள அரசியலே சிக்கலானது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இந்திய முஸ்லிம்களை அரசியல், சமூக ரீதியிலும் குறியீட்டு ரீதியிலும் திட்டமிட்டு ஓரங்கட்டிவருகிறது. மாநிலத்திற்கு மாநிலம், ஏன் தேசியத் தேர்தல்களிலும்கூட, முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 14%க்கும் அதிகமாக இருந்தபோதிலும், ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்துவதற்குகூட அக்கட்சி மறுத்துவிட்டது.

பாஜக தலைவர்கள் முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள், பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து இழிவுபடுத்திவருவதுடன், அவர்களை “பாகிஸ்தானுக்குப் போ!” என்றும் கூறிவருகின்றனர். ஆயினும், உலக அரங்கில் — குறிப்பாக, இந்தியாவின் எரிசக்தித் தேவைகளுக்கு நிதியளிக்கும், அல்லது அதன் பணியாளர்களுக்கு இடமளிக்கும் வளைகுடா நாடுகளின் பார்வையில் — அனைவரையும் உள்ளடக்குவதான ஒரு தோற்றம் தேவைப்படும்போது மட்டும் அக்கட்சி திடீரென முஸ்லிம் தூதுவர்களைத் தேடிக் கண்டறிகிறது.

இதில் விந்தை என்னவென்றால், இவர்களும்கூட பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் அல்லர். பாஜகவில் அப்படி எவரும் இல்லை. இவர்கள் பிற கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள். இவர்களும்கூட பயன்படுத்தப்படுகிறார்களே தவிர, அரவணைக்கப்படுவதில்லை.

இது உள்ளடக்குவதல்ல; சுரண்டல்!

உள்நாட்டில் பாஜகவின் அரசியல், முஸ்லிம்களை இழிவுபடுத்துவதிலேயே செழித்தோங்குகிறது — அது வெறுப்புப் பேச்சுகள், கும்பல் வன்முறைகள், புல்டோசர் நீதி என எதுவாக இருப்பினும் சரி. முஸ்லிம்கள் ‘அந்நியர்கள்’ என்றும், ஐந்தாம் படை என்றும், பிரிவினையின் சுமை என்றும் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தக் கதையாடலைத் தீவிரமாக முன்னெடுக்கும் இந்துத்துவச் சக்திகளின் சித்தாந்த முன்னோடிகளான சாவர்க்கர், இந்து மகாசபை போன்றோர்தாம் இரு தேசக் கோட்பாடு மைய நீரோட்டத்திற்கு வருவதற்கு முன்பே அதனை வெளிப்படையாக ஆதரித்தவர்கள். இன்றுள்ள முஸ்லிம்கள், தாங்கள் வடிவமைக்காத வரலாற்றிற்காக வருந்தும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்; பெரும்பான்மைத் தரப்பினரின் தயவை நாடும் பலிபீடத்தில் தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

ஆளும் கட்சிகளில் மிகப் பெரியது பாஜக. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஓர் ஜனநாயக நாட்டில் அநேகமாக உள்ளதிலேயே மிகப் பணக்கார அரசியல் கட்சியும் அதுதான். இருந்தும் அது, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் ஆளுமைகளை தன்னுடைய சொந்த அணிகளின் மத்தியிலிருந்து கண்டறிவதில் திணறுகிறது. அத்தகைய ஆளுமைகள் மிகவும் அரிதாக இருப்பதால், தன்னால் கடுமையாகக் கண்டிக்கப்படும் எதிர்க் கட்சிகளையே இதற்காக அது நாட வேண்டியுள்ளது.

1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், அனைத்து கேமராக்களின் ஒளியையும் ஈர்க்கும் அளவுக்குப் பெரிய சர்வதேச முகம் ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது. அந்தப் பிரதிபலிப்பில், உலகம் பன்முகத்தன்மையை அல்ல, வெற்றிடத்தையே காண்கிறது. உலகளாவிய அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு தேசம், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வெளி மூலங்களிலிருந்தே பெற வேண்டிய ஓர் கட்டாயத்தில் உள்ளது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தக் குற்றவுணர்விலிருந்து இந்திய முஸ்லிம்கள் வெளியேற வேண்டிய நேரம் இது. உலகளாவிய விமர்சனங்களைத் திசைதிருப்ப வடிவமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுக்களில் பெயரளவிலான பங்கேற்பின் மூலம் தேசப்பற்று நிரூபிக்கப்படுவதில்லை. நிறுவனரீதியான புறக்கணிப்புக்கு எதிராக மௌனம் சாதிப்பதன் மூலமும் அது வெளிப்படுத்தப்படக்கூடாது. இந்திய முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை யாசிப்பவர்களாக அல்லாமல், சமமான குடிமக்களாக, ஜனநாயகத்தில் பங்காளிகளாக —ராஜதந்திரத்தில் பகடைக் காய்களாக அல்ல — அவற்றை நிலைநாட்ட வேண்டும்.

அதுவரை, இத்தகைய ஒவ்வொரு பிரதிநிதிகள் குழுவும் பின்வருவதற்கான மற்றொரு நினைவூட்டலே: ‘இந்தியாவின் முஸ்லிம்கள் உலக அரங்கில் அணிவகுத்துச் செல்லத் தகுதியானவர்கள்; ஆனால் தங்கள் சொந்த நாட்டில் ஆட்சியில் பங்கெடுக்கத் தகுதியற்றவர்கள்!’

— ரஷீது அஹ்மது

(ரஷீது அஹ்மது, இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் நிறுவனர்களில் ஒருவரும் நிர்வாக இயக்குநரும் ஆவார். ’இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில்’ என்பது அமெரிக்காவில் உள்ள வெளிநாடுவாழ் இந்திய முஸ்லிம்களின் அமைப்புகளிலேயே மிகப் பழையதும் பெரியதும் ஆகும். இக்கட்டுரையில் அவர் முன்வைத்துள்ளவை அவர் சார்ந்துள்ள அமைப்பின் கண்ணோட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவை அல்ல.)

தமிழில்: A. செய்யது அலீ

(நன்றி: மக்தூபு மீடியா)

Related posts

Leave a Comment